Saturday, June 2, 2007

அம்முவாகிய நான் (சபேஷ்-முரளி)

சபேஷ்-முரளி இன்னும் ஒன்றையும் சாதிக்கவில்லையே என்று யோசிப்பவர்களுக்கு அம்முவாகிய நான் படத்தின் இசை மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். கடைசியாக சேரனின் தவமாய் தவமிருந்து (உன்னை சரணடைந்தேன்) மற்றும் கூடல் நகர் (தமிழ்ச்செல்வி) படங்களில் ஓரளவு கேட்கும்படியான இசையை தந்தவர்கள், இப்படத்தில், செந்தமிழில் சொன்னால், பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்! கடலே கடலேவில் மாதங்கியின் குரலும், அந்த கால இளையராஜாவின் பின்னணி இசையும், வித்தியாசமான தட்டச்சு ஓசையுடன் களை கட்டுகிறது. இதே பாடலை சபேஷ் தனியாக பாட அதுவும் நன்றகவே இருக்கிறது - அவரது உச்சரிப்பைத்தவிர! சிலீர் சிலீர் பாடலில் ரெஹ்மானின் காதலர் தினம் பாடலான ரோஜா ரோஜாவின் மிகமெல்லிய சாயல் தென்பட்டாலும், ஹிந்துஸ்தானி இசையையும் சிதாரையும் சரியான விகிதத்தில் கலந்தது பிரமாதம். மாயாமாளவகௌளை ராகத்தை அடிப்படையாக கொண்ட தோரணம் ஆயிரம் பாடலும், அப்பட்டமான கௌரிமனோஹரியில் அமைந்த உன்னை சரணடைந்தேன் பாடலும், இதற்கு இசை சபேஷ்-முரளிதானா என்று கேட்க வைக்கிறது - அவ்வளவு அழகான இசை சேர்ப்பு இரண்டிலும்! அம்முவாகிய நான் இந்த இரட்டை இசையமைப்பாளர்களின் இதுவரை வெளிவந்திருக்கும் இசைதொகுப்புகளிலேயே மிகச்சிறந்தது என்பது என் கருத்து.

1 comment:

Ganesh Gopalasubramanian said...

"கடலே", "ஒரு கிளி உருகுது" நினைவு படுத்துகிறது. "உன்னைச் சரணடைந்தேன்" "கனா காணும் காலங்கள்"ஐ நினைவு படுத்துகிறது. "தோரணம் ஆயிரம்" அருமையாக இருக்கிறது.

இளையராஜா இசைப்பிரியர்களுக்கு இந்த தொகுப்பு கண்டிப்பாக பிடிக்கும்.