Saturday, July 7, 2007

தொட்டால் பூ மலரும் (யுவன் ஷங்கர் ராஜா)

ஹிந்தியில் ஆரம்பித்து, ஒமர் கய்யாமை இழுத்து, மெலிதான தாளத்துடன் அரபு நாடே தாலாட்டுகிறது. ஹரிசரணின் தேர்வும் கச்சிதம். விட்டால் சூரியனை பாடலில் ரன்ஜீத்தின் உயிரோட்டமுள்ள குரலும், இசைச்சேர்கையும் சுண்டியிழுக்கின்றன. வாடி வம்புப்பெண்ணே ரகுமானை நினைவுபடுத்தினாலும் மனதில் ஒட்டவில்லை. என்னப்பிடிச்சவும் அதே ரகம்தான். விஜய் யெஸுதாஸின் வளையல் கரங்களை பாடலில் இனிமையான வாத்தியச்சேர்க்கை இருப்பினும் நினைவில் நிற்கும் அளவு பெரிதாக ஒன்றும் இல்லை. கடத்துறேன் நான் உன்ன குத்து பாடல்களின் இலக்கணத்தில் தொடங்கினாலும், அதற்குரிய மற்ற உத்திகள் இல்லாமல் சற்று வலுவில்லாமலேயே ஒலிக்கிறது. பி.வாசு, இளையராஜாவிடமிருந்து பெற்ற பாடல்களைப்போல் மகனிடமிருந்து கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

Tuesday, June 26, 2007

கிரீடம் (G.V.பிரகாஷ்குமார்)

அக்கம் பக்கம் மற்றும் விழியில் பாடல்களில், இனிமையான பின்னணி இசையும், ரம்மியமான ராகங்கள் இருந்தாலும் இசையமைப்பாளரின் தனித்துவம் இல்லை - ஆரம்பகால ரகுமானை நினைவுபடுத்துகிறது. நாம் எண்பதுகளில் விட்டுத்தொலைத்த சோகமே உருவான 'pathos' பாடலை மீண்டும் கண்ணீரில் கேட்கலாம்...உம்ம்...கேட்க வேண்டாம். தல அஜித் இருந்தால் தலையின் அறிமுக பாடல் இருந்தாக வேண்டுமே...இருக்கிறது...விளையாடு விளையாடு. ஆனால் பாடல் என்னவோ தட்டுத்தடுமாறி எங்கெங்கோ செல்வதால் மனதில் பதிய மறுக்கிறது. கடைசியாக, நா.முத்துகுமார் கனவெல்லாம் பாடலில், தந்தை-மகன் உறையாடலில் பிரமாதப்படுத்துகிறார். இசையும் பக்கபலம். சில நல்ல மெட்டுக்கள் இருந்தாலும் G.V.பிரகாஷ்குமாரின் முந்தைய இரு படங்களின் தனித்துவம் ஏனோ இங்கே இல்லை - ஒரு சராசரி புதிய தலைமுறை தமிழ் இசையமைப்பாளர்தான் தென்படுகிறார்.

Tuesday, June 19, 2007

சிவாஜி (ஷங்கர்)

முன் வழுக்கை/ வழுக்கை. வயதின் ரேகைகள் எளிதாக தெரியும் முகம். முதிர்ந்த நடை. சற்றே பழைய ஸ்டைல் உடைகள். வழக்கமான, நன்கு பழக்கப்பட்ட அறிமுக காட்சி. இப்படி, ரஜினியிலும், அவரது படங்களிலும் வரும் எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து, நேர்த்தியாக்கி, மிக பிரமாண்டமான ஒரு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

கோட்டை விட்டது ஒன்றை மட்டுமே - அவரது சமூக கருத்து சொல்லும் படங்களில் உள்ள நடுத்தர வர்க நம்பகத்தன்மை. ரஜினியின் படங்களின் மார்க்கெட்டை பார்த்தால் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை.

புதியதொரு சிகையலங்காரத்தில் முதல் பாதியில் காமெடி ரஜினி, இடைவேளைக்கு சற்றே பிறகு நமக்கு பழக்கமான பாட்ஷா ரஜினியாக மாறி வில்லனுக்கு சவால் விடுகிறார். கடைசியில் மொட்டை அவதாரத்தில் வந்து பின்னி பெடலெடுக்கிறார் சூப்பர் ஸ்டார். விவேக்கின் கதாபாத்திரம் ஷங்கரின் கற்பனைக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு - அவ்வளவு சரியான விகிதத்தில் சிரிப்பு மற்றும் பக்கவாத்தியம்.

அடக்கி வாசித்து வில்லதனத்தில் அள்ளுகிறார் சுமன். ஷ்ரேயா வழக்கமான, குளிர்ச்சியான ஷங்கர் கதாநாயகி. எம்.ஜீ.ஆர், சிவாஜி, கமல் என பல முயல்களை லாவகமாக, தொப்பிகுள்ளிருந்து சரியான நேரத்தில், ரசிகக்கண்மணிகளின் எதிர்பார்ப்பிர்கிணங்க எடுக்கிறார் இயக்குனர்.

பல்லேலக்கா பாடல் காட்சி, ஷங்கர் புதிதாக எதையும் யோசிக்கவில்லை என்பதையும், ஸஹானா பாடல் காட்சி, என்னதான் பிரமாண்டம் இருந்தாலும் அலுக்கலாம் என்பதையும் காட்டுகிறது. ஆனால் அதிரடியும், வாஜி வாஜியும் பட்டையை கிளப்புவது உண்மை! ரகுமானின் பின்னணி இசை அதிர்வேட்டு விருந்து.

ஷங்கரின் பட வரிசையை பார்த்தால் ஒன்று தெரிகிறது. ஒரு சமூக கருத்துள்ள படத்திற்க்கு பிறகு ஒரு ஜாலி படம் என்ற ஃபார்முலா. ஜென்டில்மேன் - காதலன். இந்தியன் - ஜீன்ஸ். முதல்வன் - பாய்ஸ். அந்நியன் - சிவாஜி? இந்த படத்தில், கருத்து என்ற போர்வை, ரஜினியின் இமேஜுக்கு முன்பு சுத்தமாக அடிபட்டு ஓட்டையாகிறதால் ஷங்கர் தனது ஃபார்முலாவை சரியாக பின்பற்றியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு நிஜம் பயங்கரமாக உறுத்துகிறது - ரஜினியின் வயது. பல இடங்களில் அப்பட்டமாகவும், பாடல்களில் அந்த தளர்ச்சி, என்னதான் நடன இயக்குனர்கள் கடுமையாக உழைத்திருந்தாலும், நன்றாகவே தெரிகிறது. என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவரும் ஒரு 58 வயது மனிதர். இந்த ஒரு தருணத்தில், வயதுக்கேற்ற முடிவுகளை எடுக்கவில்லை என்றால், அவரே அவரது கேலிச்சித்திரமாக மாறும் சாத்தியங்கள் அதிகம்.

அவரது மகளின் சுல்தான் என்ற கார்ட்டூன், அந்த விதத்தில், சூப்பர் ஸ்டார் என்ற மாயையை தொடர ஒரு சரியான முயற்ச்சி.

Thursday, June 14, 2007

சத்தம் போடாதே (யுவன் ஷங்கர் ராஜா)

ஒரு குழந்தையை பார்த்து பாடப்படும் பாடல் என்ற நோக்கில் பார்க்கையில், அழகு குட்டியில் ஓசையும் அதிகம், ஷங்கர் மஹாதேவனின் குரலின் கடுமையும் அதிகம். யுவனின் ஆரம்ப கால, அனுபவமற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது ஓ இந்த காதல். அத்நான் ஸாமியும் தமிழை உணர்ச்சியின்றி கடித்து துப்புகிறார். நல்லவேளையாக வீவா குழுவினரின் தமிழ், பேசுகிறேன் பேசுகிறேன் பாடலில் பரவாயில்லை. பாடலின் இசையும், ராகமும் ரசிக்கதக்க வகையில் மயக்குகின்றன. சாதாரணமாக அனுஷ்காவிற்க்கு ஒதுக்கப்படும் எந்த குதிரையில் பாடலை ஷ்ரேயா கோஷால் ஒரு கை பார்த்து, பிரமாதப்படுத்துகிறார். யுவனின் பின்னணி இசையும், உலக இசையை குழைத்து நா.முத்துகுமாரின் வரிகளோடு நன்றாகவே இணைகிறது இந்தப்பாடலில். சுதா ரகுநாதன், தனது வழக்கமான திரைப்பாடல்களிலிருந்து மிகவும் விலகிய ஒரு விதத்தில் பாடி காதல் பெரியதாவில் கலக்குகிறார். காதலையும் காமத்தையும் ஒன்றோடு ஒன்று மோத வைப்பதில் நா.முத்துகுமாரும், அரேபிய இசையின் மெல்லிய சாயல் கொண்ட இசை சேர்க்கையில் யுவனும் மிளிற்கின்றனர். இயக்குநர் வஸந்த் யுவனின் பாடல்களை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததாலோ என்னவோ...கூட்டிக்கழித்து பார்த்தால், யுவனும் வஸந்தும் இணைந்த பூவெல்லாம் கேட்டுப்பாரின் பாடல்களை விட சத்தம் போடாதேவின் பாடல்கள் சுமார்தான்.

Sunday, June 10, 2007

திருத்தம் (ப்ரவீன் மணி)

குத்து பாடல்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் உன்னத பணியை படவா கைய புடிடா செய்கிறது - பெயரை கேட்டாலே தெரியவில்லை? தூங்கி வழியும் எஸ்.ஏ.ராஜ்குமாரை காப்பியடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை போல் உள்ளது, லாபம் யோகம். அறுபதுகளில் வெளி வந்த தத்துவ பாடல்களைப்போல் வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பாதை தெரிகிறதில் பாதையையும் சேர்த்து எதுவும் தெரிகிறார்போல் இல்லை. ஆனால் காதல் கண்மணியை மட்டும் உன்னி மேனன் காப்பாற்றிவிடுகிரார் - பின்னணி இசையும் பிரமாதம். கருவாப்பையாவின் மாய வார்த்தை ஜாலத்தை (!) மீண்டும் நினைவுபடுத்தும் - பெண்பாலில் - சிடுமூன்ஜி தேவதையே, அந்த பழதில் இருந்த எளிமை இதில் இல்லாததால் மனதில் ஒட்டவில்லை. ஒரு சில பெரிய இசையமைப்பாளர்களோடு இணைத்து பேசப்பட்டதை தவிர, ப்ரவீன் மணி, திருத்தம் போன்ற உயிரற்ற இசையில்தான் தனது தனித்துவத்தை கண்டுகொள்கிறார் போல!

Saturday, June 2, 2007

அம்முவாகிய நான் (சபேஷ்-முரளி)

சபேஷ்-முரளி இன்னும் ஒன்றையும் சாதிக்கவில்லையே என்று யோசிப்பவர்களுக்கு அம்முவாகிய நான் படத்தின் இசை மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். கடைசியாக சேரனின் தவமாய் தவமிருந்து (உன்னை சரணடைந்தேன்) மற்றும் கூடல் நகர் (தமிழ்ச்செல்வி) படங்களில் ஓரளவு கேட்கும்படியான இசையை தந்தவர்கள், இப்படத்தில், செந்தமிழில் சொன்னால், பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்! கடலே கடலேவில் மாதங்கியின் குரலும், அந்த கால இளையராஜாவின் பின்னணி இசையும், வித்தியாசமான தட்டச்சு ஓசையுடன் களை கட்டுகிறது. இதே பாடலை சபேஷ் தனியாக பாட அதுவும் நன்றகவே இருக்கிறது - அவரது உச்சரிப்பைத்தவிர! சிலீர் சிலீர் பாடலில் ரெஹ்மானின் காதலர் தினம் பாடலான ரோஜா ரோஜாவின் மிகமெல்லிய சாயல் தென்பட்டாலும், ஹிந்துஸ்தானி இசையையும் சிதாரையும் சரியான விகிதத்தில் கலந்தது பிரமாதம். மாயாமாளவகௌளை ராகத்தை அடிப்படையாக கொண்ட தோரணம் ஆயிரம் பாடலும், அப்பட்டமான கௌரிமனோஹரியில் அமைந்த உன்னை சரணடைந்தேன் பாடலும், இதற்கு இசை சபேஷ்-முரளிதானா என்று கேட்க வைக்கிறது - அவ்வளவு அழகான இசை சேர்ப்பு இரண்டிலும்! அம்முவாகிய நான் இந்த இரட்டை இசையமைப்பாளர்களின் இதுவரை வெளிவந்திருக்கும் இசைதொகுப்புகளிலேயே மிகச்சிறந்தது என்பது என் கருத்து.

தெம்புஸ் ஃபுஜித் (Tempus Fugit) - கமலஹாசனை கவர்ந்த ஸ்பெயின் நாட்டு படம்!

கமலஹாசனின் பல தமிழ்ப்படங்கள் ஆங்கில மொழி படங்களின் மிகத்திறமையான தழுவல்கள் என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. தெனாலி (What about Bob?), அன்பே சிவம் (Planes, Trains and Automobiles), அவ்வை சண்முகி (Mrs. Doubtfire), பஞ்சதந்திரம் (Very bad things), சதிலீலாவதி (She devil), மகளிர் மட்டும் (Nine to five), நம்மவர் (To sir with love)...என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

ஆனால், கடந்த 2004ம் ஆண்டு, கமலின் 51வது பிறந்த நாளையொட்டிய பேட்டி ஒன்றில், தான் ஒரு ஸ்பெயின் நாட்டு படத்தின் மறுபதிவு உரிமையை பணம் கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளதை அறிந்ததும் என் ஆர்வம் தூண்டபட்டது. அந்தப்படம் எதை பற்றியது, எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்கத்தொடங்கினேன்.

ஒருவழியாக சென்ற வாரம்தான் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு (சரியான சொல், 'பாக்கியம்'!) கிடைத்தது. தெம்புஸ் ஃபுஜிட் (time flies, காலம் பறக்கிறது) தொலைக்காட்சிக்காக (ஸ்பேயின் நாட்டு TV3) தயாரிக்கபட்ட ஒரு சிறு பட்ஜெட் படம். பார்சிலோனா பக்கம் பேசப்படும் கதலான் மொழியில் உருவாகியுள்ள படம்.

ஆனால் இப்படம் கையாளும் கதைக்களம் அற்புதமானது. ஹாலிவுட்டிற்கே உரிய காலப்பயணம் (Time travel) மற்றும் தனி ஒருவன் உலகத்தையே காப்பற்றக்கூடிய super hero போன்ற கதை அமைப்பை கோண்ட இந்தப்படம் அது போன்ற மிக பிரம்மாண்டமான விஷயங்களை, சதாரணமாகவும், நேர்த்தியாகவும், மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் பயன்படுத்துகிறது.

மிகுந்த சாகசத்துடன் உலகை காப்பாற்றும் கதாநாயகனை மறந்துவிடுங்கள். காலத்தில் பின்னோக்கி சென்று சொந்த அப்பாவையே இளைஞனாக பார்த்து பேசி வரும், Back to the future போன்ற முரண்பாட்டு வேடிக்கையும் இங்கு இல்லை. காலப்பயணத்தை பற்றி இருந்தாலும் நமது கதாநாயகன் பயணிப்பதோ சொற்ப நாட்களே - சில சமயம் அரை நாள் பின்னோக்கி, சில சமயம் 6-7 நாட்கள் முன்னே...அவ்வளவுதான்!

ஆனால் பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்ற கோட்பாடு, சிறு, அசாதாரண, ஆரம்ப நிகழ்வுகள், மிகப்பெரிய பின்விளைவுகளை உருவாக்கும் என்கிறது. இப்படத்தின் கதாநாயகன் மிகச்சாதாரண watch repairகாரன்! அவன் வாழ்க்கையில் ஒரு எதிர்கால மனிதன் வந்து, "உன்னால் தான் உலகத்தை காப்பாற்ற முடியும்" என்று சொல்லும்போது நமக்கும் தூக்கிவாரி போடுகிறது!
அப்படி உலகை காப்பாற்ற அவன் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம் - தினமும் காலையில் செய்தித்தாளுடன் வாங்கும் மிட்டாயை ஒரு நாள் வாங்காமல் இருந்தால் போதும்! இந்த ஒரு அற்பமான விஷயம் உலகை எப்படி காப்பாற்ற உதவும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது!

படத்தின் கதையை அப்பட்டமாக சொல்லாமல், வேறு ஒரு உதாரணம் சொல்கிறேன்! உங்கள் அம்மா வடாம் காயப்போட உங்களை மொட்டைமாடிக்கு அனுப்ப, அங்கு நீங்கள் அடுத்த வீட்டு மல்லிகாவை பார்த்து வழிய, அதை மல்லிகாவின் புருஷன் பார்த்து, கோபப்பட்டு உங்கள் வீட்டிற்க்கு வந்து சத்தம் போட, சண்டை முற்றி கைகலப்பில் போய், அவமானம் தாங்காமல் உங்கள் அப்பா நாக்பூர் டிரான்ஸ்ஃபர் வாங்க, சுட்டுப்போட்டாலும் ஹிந்தி வராமலிருந்த உங்களுக்கு அங்கு பல வருடம் பள்ளி, கல்லூரியில் பயின்றதால் ஹிந்தி பிரமாதமாக வர, நீங்கள் மும்பையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக, பின் ஹிந்தி படங்களில் நடிக்க, உங்களுக்கு தமிழ் தெரிந்ததால், தமிழிலும் பெரிய நடிகனாக...இது எல்லாவற்றுக்கும் காரணம் அப்பாவி வடாம் என்று உங்களுக்கு தெரியவா போகிறது?

எதிர்கால மனிதன் நமது கதாநாயகனை ஏன் தேர்ந்தெடுத்தான் என்பது சுவாரசியமான கதை - மிகச்சாதாரணமான அவன் இதை வேறு எதற்கும் பயன்படுத்த வக்கில்லாமல், பதிலுக்கு முரண்டுபிடிக்காமல் இருப்பான் என்பதால் மட்டுமே! ஆனால் அவன் செயலால் நிகழும் chain reaction உலகை காப்பாற்ற உதவும் என்பது மட்டும் உண்மை!

இதற்கு நேர்மாறாக காலப்பயணம் செய்ய உதவும் மாத்திரைகள் ஒரு தீவிர ஃபுட்பால் ரசிகனிடமும் சென்றடைகிறது. அவன் எவ்வாறு 6 நாட்கள் எதிர்காலத்தில் சென்று தான் விரும்பும் அணி finalsஇல் வெற்றி பெற்றதா என்று பார்க்கப்போய், அங்கு அவனது எதிர்கால 'அவனை' பார்த்து, இருவரும் (ஒருவரும்?) நண்பர்களாகும் குழப்பமான வேடிக்கை துணைக்கதையும் இப்படத்தில் உண்டு!

கமல் எவ்வளவு ரசனையுடன் மற்ற தழுவல்களை கையாண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் போது தெம்புஸ் ஃபுஜிட்டையும் மிக நேர்த்தியாக உருவாக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. தவிர, மற்ற தழுவல்களைப்போல் இல்லாமல் மூலக்கதையை இங்கே தைரியமாக சுட்டிக்காட்டலாம்!

Poster courtesy: IMDB.com

Thursday, May 31, 2007

தீ நகர் (ஜாசி கிஃப்ட்)

நீயெ என் சாராயத்தெரு மற்றும் காப்பாத்த முடியல, பெயருக்கு ஏற்றார்போல் அபத்தமாக உள்ளன. ஆயினும், முதல் பாடலின் வாத்தியக்கலவை வித்தியாசமாக உள்ளதால் ஈர்க்கிறது. காப்பாத்த முடியலவின் தாளக்கலவை எண்பதுகளில் வெளியான இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தினாலும், இப்பொழுது நாம் அந்த காலகட்டத்தை கடந்து பல வருடங்கள் ஆனது நினைவிருக்கலாம்! கடவுள் எதுக்கு பாடலில் சித்ராவின் குரல் இருந்தாலும் எனக்கு ஏற்படும் உணர்ச்சி தூக்கம் மட்டுமே! நமக்கு பரிச்சயமான நாட்டுப்புற இசையை தழுவியவையாக இருந்தாலும் ஒத்த புள்ள மற்றும் கலகக்காரா பாடல்களில் வலு மிகவும் குறைவுதான். அனுபவமே இல்லாத ஒரு கத்துக்குட்டி இசை அமைப்பாளரின் எல்லா சாயலும் ஆயிரம் ஆயிரம் பாடலில் உள்ளது. தீ நகர் இசையை கேட்கும்பொழுது, ஜாசி கிஃப்டின் இசை அமைப்பாளர் என்ற அடையாளம் அபூர்வமான, ஒரு-பட நிகழ்வாகவே தோன்றுகிறது.